Friday 21 June 2013

ஓரம் போ... ட்ராஃபிக் கலாட்டா..!!


                                 

சமீபத்துல யாரோ சொன்னதை ஒரு நாளிதழ்ல படிச்சது,"ஒரு ஊருல மக்கள் எந்த அளவு பக்குவப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள அவர்கள் சாலையில் எப்படி வண்டி ஓட்டுகிறார்கள் என்பதை வைத்தே புரிந்துகொள்ளலாம்". அவரு சொன்னது சரியா தப்பான்னு தெரியல,ஆனா கண்டிப்பா சரியா இருக்கக் கூடாது இருந்துச்சுன்னா நம்ம ஊரு மாதிரி மட்டமான ஊரு உலகத்துலையே இருக்காது.ஏன்னா நம்ம ஊருல நெறைய பேருக்கு வண்டி எப்படி ஓட்டுறதுன்னு தெரியும்,ஆனா எப்படி வண்டிய ஒட்டுறதுன்னு தெரியாது.அதாவது accelerator கொடுத்தா ஓடும்,பிரெக் போட்டா நிக்கும்ங்குறத மட்டும் கத்துக்கிட்டாலே வண்டி ஓட்ட ஆரம்பிச்சிருவாங்க. ரோட்டுல முக்கால்வாசி பேருக்கு வண்டி ஓட்டும் போது கொடுக்குற சிக்னல் எதுவுமே புரியாது.இன்னும் பல பேரு வண்டியில இண்டிகேட்டர்ன்னு ஒன்னு இருக்குறதே வெறும் அலங்காரத்துக்குன்னு மட்டும் தான் நெனச்சிருக்காங்க. ஒரு தடவ நானும் நண்பனும் வண்டியில போகும் போது அவன் ஓட்டிட்டு இருந்தான், இடது பக்கம் திரும்பும்போது மட்டும் கை சிக்னலோ, இண்டிகேட்டரோ போடாம படக் படக்குனு திருப்புனான் நான்,"ஏண்டா வலது பக்கம் போறப்போ மட்டும் சிக்னல் தர, இடது பக்கம் போறப்போ சிக்னல் தர மாட்டேங்குற"ன்னு கேட்டேன்,அதுக்கு அவன் "மச்சி நமக்கு keep left தான அதுனால இடது பக்கம் போனா எப்பவுமே சிக்னல் தர வேணாம்டா"என்றான்.
நான்,"டேய் என்னடா நீயா ஒரு ரூல்ஸ் போடுற??அப்படியெல்லாம் கிடையாதுடா,பின்னாடி வரவனுக்கு நீ எந்த பக்கம் போறன்னு எப்படிடா தெரியும் அதுக்குதான்டா சிக்னல்.சரி அப்புறம் எதுக்குடா வண்டியில left இண்டிகேட்டர் வச்சிருகாய்ங்க,அத சொல்லு".அவன் பதிலே சொல்ல.இப்படி இவய்ங்களா எதாச்சும் மனசுல கற்பனைய வளத்துகிட்டு  ஒரு பழக்கத்த ஃபாலோ பண்றாய்ங்க.அதே மாதிரி சிட்டிக்குள்ள வண்டி ஓட்டும் போதும் ஹெட்லைட்ட" "ஹை-பீம்"ல வச்சு தான் வண்டி ஓட்றாங்க,எதிர்ல வர்ற வண்டி ஓட்றவங்களுக்கு கண் கூசுமேங்குற எண்ணமே இருக்காது, நாம கேட்டோம்னா,"நீயாடா எனக்கு கரெண்ட் பில்லு கட்டுற, என் லைட்ட நான் எப்படி வேணாலும் போடுவேன்னு அகராதி பேசுறாய்ங்க.

இதெல்லாம் விட கொடுமை சிக்னல்ல நிக்கிறப்போ தான் நடக்கும். முக்கியமா பாலத்துல இடது பக்கம் போகவேண்டியவன் வலது பக்கம் நிப்பான்,நேரா போக வேண்டியவன் இடது பக்கமா நிப்பான்.இதுல அடிச்சு புடிச்சு நாம் வெளிய வர்றதுக்குள்ள அடுத்த சிக்னல் விழுந்துரும்.இதுல உச்சக்கட்ட கொடுமை என்னனா சிக்னல்ல நமக்கு ஃப்ரீ லெப்ட் போட்ருக்கும் ஆனா நேரா போறவன் வலது பக்கம் போறவனெல்லாம் இடது பக்கம் வழிய மறிச்சு நிப்பாய்ங்க,என்னதான் அந்த இடத்துல நீங்க தலைகீழா தண்ணீ குடிச்சாலும் நகரவே மாட்டாய்ங்க.அவனுங்க போனாதான் நாமளும் போனும்,அப்படியொரு நல்ல எண்ணம். இப்பெல்லாம்.எலெக்ட்ரானிக் டைமர் சிக்னல் வேறயா நம்ம ஆளுங்க கிட்ட கேக்கவே வேணாம்.மதுரையில 5 செகண்ட் பாக்கி இருக்கும் போதே வண்டிய கிளப்புறாங்கன்னா,சென்னையில குறஞ்சது 8 செகண்ட்லையே எடுத்துறாய்ங்க.தப்பித் தவறி 1,0 ஆகுற வரைக்கும் நின்னோம்னா செத்தோம்.ஒன்னு ஹார்ன் அடிச்சே சாவடிப்பாய்ங்க இல்லைனா அசிங்கமா அர்ச்சனை ஆரம்பிச்சிருவாய்ங்க. இந்த அனுபவம் எனக்கு நெறையா இருக்கு. சிக்னல்ல ஹார்ன் அடிக்கிறத கூட ஏத்துக்கலாம். அது ஏண்டா 'டோல் கேட்'ல நிக்கும் போது கூட அடிக்கிறீங்க??

கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி சொல்லுவாங்க சென்னைல மட்டும் வண்டி ஓட்டிட்டா தமிழ்நாட்டுல எங்க வேணாலும் ஓட்டலாம்னு, ஆனா இப்போ சென்னையில கூட வண்டி ஓட்டிறலாம்,பாலமெல்லாம் கட்டி பெருமளவு போக்குவரத்து நெரிசலை கட்டுபடுத்திருக்காங்க. அதே நிலமை இப்பொ மதுரையில வந்திருக்கு. அதுலையும் மதுரையில இப்பெல்லாம் வண்டியெடுதுட்டு வெளிய போயிட்டு பத்திரமா வீடு வந்து சேந்துட்டோம்னா முன் ஜென்ம புண்ணியம் தான். அத வச்சு ஒரு நாள் என் நண்பன் கிட்ட சொன்னேன், "மச்சி முன்னாடி தான் சென்னைல ஓட்டுறது கஷ்டம்,இப்பொ மதுரையில ஓட்டிட்டேன்னா எங்க வேணா ஓட்டலாம்டா", அவன்,"என்னடா இப்படி சொல்ற எங்க ஊருல நம்ம திருப்பூர்ல ஓட்டிட்டா எங்க வேணாலும் ஓட்டலாம்னு சொல்லுவாங்கடா",என்றான். அடப்பாவிங்களா அப்போ எல்லா ஊருலையும் இதே நிலமைதானா??(இதுல நமக்கு ஒரு பெருமை). அதுவும் நம்ம ஊரு ட்ராபிக்ல பீக் டைம்ல பாத்தோம்ன கூலாங்கல் குவியலுக்குள்ள தண்ணிய ஊத்துன மாதிரி நுழஞ்ச நுழஞ்சு போவாய்ங்க. அதவிட கொடுமை எதாவது ஒரு இடத்துல இடைஞ்சல் ஆயிருச்சுன்னா பின்னாடி நின்னு சரியானவுடன போவோம்ங்குற எண்ணமே இருக்காது, அப்படியே பக்கவாட்டுல போயி போயி முன்னாடி நின்னு 'டூ வே'(two way) ரோட 'ஒன் வே' (one way) மாதிரி ஆக்கிருவாய்ங்க. இப்போ அவனும் போக முடியாது நாமளும் போக முடியாது.

ஆக்சிடெண்ட் இப்பெல்லாம் சர்வ சாதாரணாமா ஆயிருச்சு. ஒரு காலத்துல மண், தண்ணி லாரி,பிரைவேட் பஸ் இவங்க தான் அந்த நல்ல காரியத்துல அதிகமா ஈடுபட்டாங்க (இப்பவும்தான்) ஆனா இப்ப இவங்களுக்கு டஃப் பைட் (tough fight) கொடுக்குறதுக்குனே வந்திருக்கிறது தான் நம்ம "பங்கு ஆட்டோ" அதான் 'ஷேர் ஆட்டோ'. ரோட்டுல வண்டி ஓட்டும் போது என்னவெல்லாம் பண்ணக்கூடாதோ அதையெல்லாம் கொஞ்சம் கூட தப்பாம கரெக்ட்டா பண்ணுவாய்ங்க. கொஞ்சம் இதயம் பலவீனமா உள்ள ஆளா மட்டும் இருந்தாங்கன்னா இந்த ஷேர் ஆட்டோ காரய்ங்க வண்டி ஓட்டுறத ஒரு 10 நிமிஷம் நின்னு பாத்தா போதும், மூணு அட்டாக் ஒன்னா வந்துரும். zooவுல குரங்கு இங்குட்டும் அங்கிட்டும் தாவுற மாதிரி ரோட்டுல எந்தப்பக்கம் இருந்தாலும் கை காட்டுனீங்கன்னா போதும் அடுத்த மைக்ரோ செகண்ட்ல அங்க இருப்பாய்ங்க.ரோட்டுல எவன் போறான் எவன் வர்றான்னு கண்டுக்கவே மாட்டாய்ங்க கருமமே கண்ணா இருப்பாங்க,கருமம்.ஷேர் ஆட்டோல பெரும்பாலும் முன்னாடி கண்டக்டர் மாதிரி ஒரு ஆளு உக்காந்திருப்பாரு.நானும் ரொம்ப நாளு வண்டிக்கு கண்டக்டர் அல்லது கிளீனரா இருப்பாரோன்னு நெனச்சேன் அப்புறம் தான் தெரிஞ்சது,அடுத்த கொஞ்ச நாள்ல அவரே ட்ரைவர் ஆக போறாரு அதுக்கான தொழில் நுனுக்கங்கள அப்சர்வ் பண்ண தான் முன்னாடி உக்காந்திருக்காருன்னு. சத்திய சோதனை!! ஒருத்தன் ஓட்டுறதையே தாங்க முடியல இதுல அவன் ட்ரெயினிங்ல வந்தவன் மட்டும் எப்படி இருப்பான்.

                                                             

டூவீலர்ல அதுவும் இப்போ இந்த 'ஆக்டிவா'வச்சிருக்காங்க பாருங்க அதுல சில பேரு இந்த விசயத்துல ஒரே மாதிரி தான் இருக்காங்க சர்ர்ர்ர்னு...பறக்குறது. .நாம மொத கியர் போட்டு எடுக்குறதுக்குள்ள அடுத்த சிக்னல் போயிர்றாங்க. ஒட்டுறதும் அப்படியே வளைச்சு வளைச்சு என்னமோ சர்கஸ் காட்டிட்டே போவாய்ங்க. பைக் ஒட்றவங்ககிட்ட இந்த ஹெல்மெட் படுற பாடு இருக்கே..யப்பா..தலைய தவிர எல்லா எடத்துலையும் மாட்டி வச்சிருக்காய்ங்க. அதைவிட முன்னாடி எல்லாம் வேடிக்கை பாத்துட்டு வண்டி ஓட்டுனானுங்க, செல்ஃபோன் பேசிட்டே வண்டி ஓட்டுனானுங்க இப்ப அடுத்தக் கட்டமா மெசேஜ் அனுப்புகிட்டே வண்டி ஓட்டுறானுங்க.. டெத் ரேட்டை(death rate) எப்படியெல்லாம் இன்கிரீஸ்(increase) பண்றதுன்னு நம்ம ஆளுங்ககிட்ட தான் கத்துக்கனும்..

   

சரி இவங்கதான் இப்படின்னு பாத்தா நடந்து போறவனுங்க தொல்லை இருக்கே..தாங்கல.. எதாவது திருவிழா,பண்டிகை சமயம்னா கேக்கவே வேணாம் ஜாலியா நடுரோட்டுல ராஜா மாதிரி உலா வருவாங்க. இன்னும் சில பேரு நடந்த போறவனுங்க என்னமோ ரஜினி மாதிரி வானத்தை பாத்துட்டு யோசிச்சிட்டே நடக்குறாய்ங்க..அட எருமை மாடு கூட ஹார்ன் அடிச்சா நகருது இவனுங்க அசையவே மாட்டேங்குறாய்ங்க..நின்னு நிதானமா திரும்பி பாத்து வண்டி மாடல், கலர், ஃபேன்சி நம்பரா இல்லையான்னு எல்லாம் பாத்துட்டுதான் நகராலாம வேணாமன்னு முடிவெடுப்பானுங்க.இன்னும் கொஞ்ச நாள்ல மாடு இவனுங்கல பாத்து, "டேய் மாடு அதான் ஹார்ன் அடிக்கிறாருல நடு ரோட்டுல திரியிற ஒதுங்கிப் போ"ன்னு சொல்லப்போவுது அப்போதான் திருந்த போறாய்ங்க.

மொத்தத்துல இன்னைக்கு நிலமையில நாம மட்டும் சரியா வண்டி ஓட்டுனா பத்தாது,எதிர்ல தப்பா ஒட்றவனுக்கும் சேர்த்து நாம அட்ஜெஸ்ட் பண்ணிதான் ஓட்டனும். அதுனால முடிஞ்சளவு நம்ம பாதுகாப்ப அதிகபடுத்திக்கனும். இதையெல்லாம் மனசுல வச்சு கவனமா வண்டி ஓட்டுனா தினமும் நாம பத்திரமா வீடு திரும்புவோம்னு எதிர்பார்த்து வீட்ல காத்துடு இருக்கவங்களுக்கு என்னைக்குமே எந்த ஏமாற்றமுமே இருக்காது.





3 comments:

  1. எல்லாமே அவசரம் தான் காரணம்... நீங்கள் சொன்ன பலவற்றை தானாக உணர்ந்து திருந்தினால் தான் உண்டு...

    ReplyDelete
  2. Thanks. I thoroughly enjoyed. You have told what I exactly felt.

    ReplyDelete
  3. Super, everyone should read and follow, do you know one more rule in a T junction a vehicle will switch on both indicator and will go straight, that is their rule for going straight. In real sense you should switch on the indicator only when it is a turn for going straight ahead no need to switch or signal anything.
    Signal jumping fellows are the worst, the 4 second 2 second is for the other directions to get clear, this fellow will horn and ask the vehicle ahead also to move when the timer comes to 4 seconds.

    ReplyDelete