Monday 21 January 2013

நம்பிக்கை நாயகன் - பவர் ஸ்டார்



இணையதளத்தில் பல பிரபலங்கள் இருக்கிறார்கள். ஆனால் இணையதளத்தால் பிரபலமானவர்கள் வெகு சிலரே,அதில் முக்கியமானவர் இவர்.ஆனால் அந்த பிரபலங்களுக்கும் இவருக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது,தன் மேல் விழுந்த கேளிகளும்,கிண்டல்களும்,எதிர்ப்புகளையுமே வைத்து பிரபலமானார்.டி.வி, பேப்பர், பேஸ்புக் என எட்டாபுறமும் வரிந்துகட்டி அவர் மேல்தனி மனித தாக்குதளில் இறங்கின. ஒரு தொலைக்காட்சி சேனல் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்து நேரடியாகவே தாக்கியது. ஆனாலும் அவர் அசரவில்லை. எதனாலும் எவராலும் அவர் முன்னேற்றத்தை தடுக்க முடியவில்லை. தனக்கும், தன் முனேற்றத்திற்கும் இடையூறாக இருந்த அனைவருக்கும் அவர் அளித்த பதில் புன்னகையே. அந்த புன்னகையின் பின்னால் இருந்தது வெறும் பல் மட்டும் அல்ல "பவர்" என்று அன்று பலருக்கு தெரியாது, ஆனால் இன்று அந்த பவரை தெரியாமல் தமிழகத்தில் யாரும் கிடையாது.


பவர் கட்டில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்திற்கு ஒரு பவர் ஸ்டேஷனாக வந்து ஒளி கொடுத்த அவர்தான் இன்று தமிழ் சினிமாவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் "Dr.பவர்ஸ்டார்".

அவரின் முதல் படம் வின்னை முட்டிய வெற்றி(!!??) என்றாலும் அன்று அவரை அனைவரும் தனக்கு தானே விளம்பரப்படுத்திக் கொள்ளும் ஒரு டி.ராஜேந்தராகவும் , பிரியாணி கொடுத்து படத்தை ஓட்டும் மற்றுமொரு J.K.ரித்தீஸாகவும், தமிழ்சினிமாவில் வந்து செல்லும் இன்னுமொரு சாம் ஆண்டர்சனாகவுமே பார்த்தனர். அவருக்குள் ஒளிந்திருந்த திறமையை யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால் இன்று கையில் லட்டை ஏந்தி வந்து அவரை கேலி செய்த அனைவருக்கும் அல்வா கொடுத்திருக்கிறார் இந்த புன்னகை அரசன்.

பெரிய ஹீரோக்களுடன் சந்தானம் நடிக்கும் படங்களில் அந்தந்த ஹீரோக்களுக்கு கிடைக்கும் அதே வரவேற்பு சந்தானம் introductionக்கும் கிடைக்கும்(சொல்லப்போனால் கூடவே கிடைக்கும்). அப்படிப்பட்ட சந்தானம் இந்த படத்தில் ஒரு  ஹீரோவா நடிக்கும் போது அவருக்கு எந்த அளவு வரவேற்ப்பு இருக்கும்.ஆனால் தியேட்டரில் படத்தை பார்த்த அனைவருக்கும் தெரியும்,அங்கு நடந்ததே வேறு.

                                              


படத்தில் சந்தானம் என்ட்ரிக்கு எந்த ரியாக்ஷனும் இல்லை.மாறாக பவர் ஸ்டாரின் அதிரடி என்ட்ரிக்கு தியேட்டரில் விசில் சத்தம் வின்னை பிளந்தது, கைத்தட்டலில் பூமி அதிர்ந்தது. சூப்பர் ஸ்டார், அல்டிமேட் ஸ்டார்க்கு கிடைத்த அதே வரவேற்பு இரண்டாம் படத்திலேயே பவர் ஸ்டாருக்கு கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் உலக சினிமா வரலாற்றிலேயே தன் இரண்டாவது படத்திலேயே இவ்வளவு பெரிய மாஸ் ஓபனிங் கிடைத்தது பவர் ஸ்டார் ஒருத்தருக்குதான்.

சமீப காலங்களாக நம் கதாநாயகர்கள் தங்கள் படங்களை வெற்றிபெறச் செய்ய சந்தானத்தின் உதவியை நாடிக்கொண்டிருக்கையில்,  சந்தானம் தற்பொழுது பவரின் உதவியை நாடிக் கொண்டிருக்கிறார். அதன் விளைவுதான் “யா யா” படத்தில் மீண்டும் பவரின் பவரை உபயோகிக்க ஆயத்தமாகியிருக்கிறார். 

தன்னை சூப்பர் ஸ்டாருடன் ஒப்பிட்டுக்கொண்டதும், ஐஸ்வர்யா ராயுடன் நடிக்க ஆசைப் பட்டதையும் வெளிப்படையாக சொன்னதும்,மொத்தமாக ஒரே நேரத்தில் பத்து படங்களில் புக் ஆனதும்(!!??),இமாலைய வெற்றி பெற்ற தன் படமான லத்திகாவிற்கு மதுரையில் பிரம்மாண்ட விழா கொண்டாடியதுமே அவர் மேல் கேளி,கிண்டல்கள் உருவாக முக்கியமான காரணம். தற்பொழுது “AIM FOR THE SKY AND YOU WILL REACH THE CEILING” என்ற வாக்கியத்திற்கு சிறந்த உதாரணமாக மாறியிருப்பவர் பவர் ஸ்டார். வானுக்கு முயற்சி செய்தார். ஆனால் பவர் இப்பொழுது CEILING ஐ மட்டும் அடையவில்லை. விண்ணைப் பிளந்து மேலே சென்று கொண்டிருக்கிறார்.

விஜய் டி.வி. நீயா?நானா? நிகழ்ச்சி ஒரு விதத்தில் அவர் இமேஜை தாக்கி இருந்தாலும் அதுவே அவரின் இந்த வெற்றிக்கு பெரிதும் உதவியது. அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட மற்றோரு சிறப்பு விருந்தினரான எழுத்தாளர் செல்லவ் புவியரசு அவை மரியாதை இன்றி ,"இவருக்கு சினிமாவைப் பற்றிய அடிப்படை அறிவே இல்லை" என்று வெளிப்படையாகவே பேசினார்.போதாதற்கு கோபினாத் தன் பங்கிற்கு பவர் ஸ்டாரை வாரினார்."போலி கவுரவத்தை ஏன் விரும்புகிறீர்கள்", "நீங்க ஏன் இப்படியே இருக்கிங்க சீரியசா பதில் சொல்லுங்க", என்று தாக்கினார். அதற்கு பவர் ஸ்டார் கூறிய அருமையான பதில், "எல்லாரும் சீரியசா இருந்துட்டா எப்படி சார்?? அவங்க சீரியசா இருக்கட்டும் நான் காமடியாவே இருந்துட்டு போறேன்"என்றார்.

அதே விஜய் டிவியில் “அது இது எது” நிகழ்ச்சி.. பவர்ஸ்டாரை அழைத்து “வரிசையா இத்தனை படம் நடிக்கிறீங்களே...எங்கள பாத்தா பாவமா இல்லையா? நீங்க என்னதான் முடிவுல இருக்கீங்க? “ என்று கேலி செய்தார் சிவகார்த்திகேயன். “நா ஒரு படம் எடுத்த ஒரு 300 தொழிலாளர்கள் பயணடையிறாங்க. அந்த நல்லெண்ணத்துலதான் படம் எடுத்துக்கிட்டு இருக்கேன்” என்று பவர் ஸ்டார் அளித்த பதிலுக்கு  வாயை மூடிக் கொண்டு கைதட்டலை மட்டுமே சிவகார்த்திகேயனால் திருப்பித் தரமுடிந்த்து.
அந்த ஒரு சொல்லுக்காகவே பவர் ஸ்டார் பின்னால் ஒரு பெரும் கூட்டம் திரண்டது. இணயத்தில் அதுவரை கேலியும் கிண்டலும் மட்டுமே செய்யப்பட்ட பவர்ஸ்டாருக்கு பெருமளவு ஆதரவு திரண்டது. அந்த ஆதரவே இன்று அவருக்கு ரசிகர் கூட்டமாகவும் மாறியது. 

இப்படியே தன் மேல் விழுந்த கற்களையே சிற்பமாக செதுக்கிக்கொண்டார். அதன் விளைவே இன்று 'கண்ணா லட்டு தின்ன ஆசையா'வின் வெற்றியும் நாளைய சங்கரின் 'ஐ' படத்தின் வெற்றியும், இன்னும் பல வெற்றிகளும். இருண்டு கிடந்த தமிழ்நாட்டிற்கு இப்போது கிடத்திருக்கும் ஒரே பவர், நம்ம பவர் ஸ்டார் தான்.  

                                             

1 comment:

  1. எனக்கு என்னவோ அதிகமாக கற்று ஊதப்பட்ட பலூன் தான் நினைவில் வருகிறது . சுஜாதா கற்றதும் பேற்றதிலும் சொன்னது சரிதான் போலும் எதிர்காலத்தில் எல்லோரும் பதினோரு நிமிட புகழிற்கு ஆசைப்படுவார்கள் அது கிடைத்தும் விடும்

    ReplyDelete